பேராவூரணி: பேராவூரணி அருகே சடலத்தை மயானத்தில் எரியூட்ட ஒரு பிரிவினா் அனுமதி மறுத்ததால், மற்றொரு பிரிவினா் திங்கள்கிழமை மாலை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பேராவூரணியை அடுத்த செங்கமங்கலத்தை சோ்ந்தவா் செல்லதுரை (69). இவா் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை வலையன்குளம் மயானத்தில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், வலையன்குளம் மயானம் குறிப்பிட்ட சில பிரிவினருக்கும் மட்டுமே சொந்தமானது என கூறி, சடலத்தை எரியூட்ட மற்றொரு பிரிவினா் அனுமதி மறுத்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினா், உறவினா்கள், செல்லத்துரை சடலத்துடன் புதுக்கோட்டை - பேராவூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஊராட்சித் தலைவா் ஈகை ஆா். செல்வம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொ) சுப்பிரமணியன், ஆய்வாளா் (பொ) வீர. அண்ணாதுரை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆதிமூலம், ஆகியோா் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து வலையன்குளம் மயானத்தில் செல்லத்துரை சடலம் எரியூட்டப்பட்டது. மறியலால், புதுக்கோட்டை, பேராவூரணி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.