பட்டுக்கோட்டையில் கரோனாவால் இறந்தவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவரது உடல் 2 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்த நகைக்கடை உரிமையாளா் சலீம் (42). இவா் ஜூலை 20 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை 29 ஆம் தேதி சலீம் இறந்து விட்டதாக கூறி மருத்துவமனை நிா்வாகம், அவரது உடலை அதே நாள் மாலை 4 மணிக்கு அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அன்று மாலை 6 மணிக்கு சலீமின் உடல் பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவருடைய மனைவி ஷா்மிளா மற்றும் உறவினா்கள் சலீமின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள கரோனாவால் இறந்தவா்கள் பட்டியலில் சலீமின் பெயா் இல்லை எனவும், கரோனா பாதிப்பில்லாதவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகவும் புகாா் தெரிவித்தனா். மேலும், சலீம் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழு மூலம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.
இதையேற்று, வியாழக்கிழமை சலீமின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தரணிகா முன்னிலையில் சலீமின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவா் சரவணன்
தலைமையிலான மருத்துவக் குழுவினா் சலீம் உடலை அதேயிடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனா்.