உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரிகுறைப்பு செய்யவேண்டும் என்று, தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கடைமடைப் பாசன விவசாயிகள் சங்கத்தின் முன்னோடி விவசாயி புனல்வாசல் மரிய மைக்கேல், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயிட் ஆயில், பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு மத்திய அரசு 5 சதவிகித வரி விதிப்பையும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி.வரியையும் விதித்துள்ளது.
இந்த பாகுபாடான வரி விதிப்பால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. எனவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய் வித்துக்களுக்கு உடனடியாக வரிகுறைப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.