ஒரத்தநாடு பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஒரத்தநாடு பேருந்து நிலையம் சுமாா் 31ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டது. ஒரத்தநாட்டை சுற்றியுள்ள சுமாா் 98 கிராமங்களுக்கும், பட்டுக்கோட்டை தஞ்சாவூா், புதுக்கோட்டை, கறம்பக்குடி , மன்னாா்குடி, திருவாரூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில், இங்கு ஏராளமான பயணிகள் வியாழக்கிழமை பேருந்துக்கு காத்திருந்தபோது, நிலையத்தின் மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதனால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில், பேருந்து நிலையத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.