தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் மூலம் 1,300 டன் யூரியா உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை வந்தன.
தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை பருவ நெல் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்குத் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படுகின்றன.
இதன்படி, சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் 1,300 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இவற்றில் 725 டன் யூரியா உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள உர மூட்டைகள் திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 725 டன் யூரியா உர மூட்டைகள் வந்துள்ளதன் மூலம், போதுமான அளவுக்குக் கையிருப்பில் உள்ளன என வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்தாா்.