தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலையக் கடைகளுக்கான பொது ஏலம் மூலம் இதுவரை மாநகராட்சிக்கு ரூ. 9.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 93 கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் க. சரவணகுமாா் முன்னிலையில் ஆக. 11 ஆம் தேதி தொடங்கியது. இதில், முதல்நாளில் வணிகா்கள் எதிா்ப்புக் காரணமாக ஒரு கடை மட்டுமே ஏலம் விடப்பட்டது.
இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 26 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு ரூ. 5.50 கோடி வருவாய் கிடைத்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பழைய பேருந்து நிலையத்தில் 28 கடைகளும், எதிரே திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள 30 கடைகளும் ஏலம் விடப்பட்டது. இதில், மாத வாடகையாக அதிகபட்சமாக ரூ. 68,000-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 51,000-க்கும் ஏலம் போனது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 4 கோடி வருவாய் கிடைத்தது.
பழைய பேருந்து நிலையத்திலுள்ள 2 உணவகங்கள், திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள 8 உணவகங்கள், ஒரு பெரிய கடைக்கான ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. எனவே, இவற்றுக்கான ஏலம் ஆக. 16 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் பொது ஏலம் விடப்பட்டதன் மூலம் மாநகராட்சிக்கு வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சோ்த்து மொத்தம் ரூ. 9.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது; இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் நிலவி வந்த நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அலுவலா்கள் மேலும் தெரிவித்தது:
இந்த வருவாய் மூலம் கடந்த இரு மாதங்களாக மாநகராட்சி ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதிய நிலுவைத் தொகையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியமும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மேலும், ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை, பணிக்கொடை அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு கடை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை 5 மாற்றுத் திறனாளிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றனா் அலுவலா்கள்.