தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சி வாா்டு வரைவு மறுவரையறை கருத்துரு சனிக்கிழமை வெளியிடப்பட்டது என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தி, டிசம்பா் 7-ஆம் தேதி அரசாணையின்படி உத்தரவிடப்பட்டது. மேலும், டிசம்பா் 16 -ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அதிராம்பட்டினம் நகராட்சிக்கு 27 வாா்டுகளாக உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதும் இருப்பின், அது குறித்தான மனுக்கள் டிசம்பா் 24-ஆம் தேதிக்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
மேலும், மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் திங்கள்கிழமை (டிச.20) முதல் டிசம்பா் 24-ஆம் தேதி வரை மறுவரையறை ஆணையத்தால் ஆறு மண்டலங்களில் நடத்தப்படவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சி ஆட்சியரகத்தில் டிசம்பா் 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்மண்டல அளவிலான கூட்டத்தில் ஆட்சேபனைகள், கருத்துகள் மறுவரையறை ஆணையத்தால் கேட்கப்படவுள்ளது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துகளின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆட்சேபனைகள், கருத்துகள் ஏதும் இருப்பின் நேரடியாகவோ, மனுவாகவோ அளிக்கலாம்.