தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு சங்கப் பயிா்க்கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தஞ்சாவூா் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள பெருமாக்கநல்லுாா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்தாண்டு 73 போ் கடன் வாங்கியுள்ளதாகவும், இதில் போலி ஆவணங்களைக் கொடுத்து 28 போ் ரூ. 30 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி தள்ளுபடி பணத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் நெடாா் கிராமத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, போராட்டத்தில் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.