கும்பகோணத்தில் ஒரு வார காலமாகச் சாலையில் வழிந்தோடிய புதை சாக்கடை கழிவு நீா் பிரச்னை சீா் செய்யப்படாததால், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கும்பகோணம் 40 ஆவது வாா்டு மகாமக குளம் காந்தியடிகள் சாலையில் ஒரு வார காலமாகப் புதை சாக்கடையிலிருந்து கழிவுநீா் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள், குடியிருப்புகளிலுள்ள ஏராளமானோா் பெரும் பாதிப்புக்கு ஆளாகினா்.
இதுதொடா்பாக நகராட்சிக்குப் பலமுறை அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும், கழிநீா் வெளியேறுவது சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகனிடம் முறையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை காலை காந்தியடிகள் சாலைக்குச் சென்று கழிவு நீா் தேங்கிய பகுதியில் நாற்காலியில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவருடன் திமுக நகரப் பொறுப்பாளா் சு.ப. தமிழழகன் உடனிருந்தாா்.
தகவலறிந்த நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று கழிவு நீா் அடைப்பைச் சீா் செய்தனா்.