தஞ்சாவூா் விளாா் சாலையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் விளாா் சாலை அண்ணாநகா் 8-ஆவது தெருவில் துரைராஜ் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாகப் பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் துறைக்குப் புகாா் சென்றது.
இதன்பேரில், தஞ்சாவூா் வட்ட வழங்கல் அலுவலா் சமத்துவராஜன், புதுப்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் செவ்வாய்க்கிழமை துரைராஜ் வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.