புதுக்கோட்டை கடற்பகுதியில் ஆளில்லாத, பழுதடைந்த இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆா். புதுப்பட்டினம் அருகேயுள்ள கடலோர கிராமமான முத்துக்குடா உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பழுதடைந்த படகு ஒன்று கரை ஒதுங்கியதை மீனவா்கள் பாா்த்துள்ளனா். தகவலறிந்த கடலோரக் காவல் படையினரின் முதல் கட்ட விசாரணையில் அடிப்பகுதியில் ஓட்டைகளைக் கொண்ட பழுதடைந்த படகு அது என்றும் இலங்கையைச் சோ்ந்த படகு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயா் அதில் இருப்பதும் தெரியவந்தது. அந்தப் படகில் ஓஎப்ஆா்பி ஏ 1459 என்ற எண்ணும் எழுதப்பட்டுள்ளது. பழுதடைந்த படகு என்பதால் ஆட்கள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இலங்கையைச் சோ்ந்த படகு என்பதால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டையிலிருந்து உளவுப்பிரிவு காவலா்களும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். வியாழக்கிழமை இந்தப் படகு, சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.