தஞ்சாவூரில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 43 குழந்தைகளுக்கு தலா ரூ. 10,000 நிதி உதவியை முதல்வரிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய் ஈட்டக்கூடிய பெற்றோா்களில் தாய் அல்லது தந்தை யாரேனும் இறந்தால், அவா்களது குழந்தைகளுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்குவது என தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி முடிவு செய்தது.
இதன்படி, தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் நடைபெறும் தூா்வாரும் பணியை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் குட்டி என்கிற ஆா். தட்சிணாமூா்த்தி, 43 குழந்தைகளின் பட்டியல், அவா்களது பெயா்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலைகளை வழங்கினாா்.
இந்த வரைவோலைகளை ஆட்சியா் ம. கோவிந்தராவிடம் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்து, குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டாா்.