பேராவூரணியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியில் மரங்களை அகற்றுவது தொடா்பாக சாா் ஆட்சியா் சீ. பாலசந்தா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பேராவூரணி கடைவீதியில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் பெரியாா் முதன்மை சாலை, சேதுபாவாசத்திரம், ஆவணம் , அறந்தாங்கி சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழைநீா் வடிகால் வாய்க்கால், நடைமேடை அமைத்தல், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை மாற்றி அமைத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள், நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கத்துக்கு தடையாக உள்ள மரங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்து சாலைகளிலும் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் சீ. பாலசந்தா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பட்டுப்போன மரங்கள், சாய்ந்த நிலையில் உள்ள மரங்கள், தேவையற்ற மரங்களை மட்டும் அகற்ற வேண்டும் எனவும், முடிந்தவரை மரங்களை தேவையின்றி வெட்டாத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் ஜெயகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.