பட்டுக்கோட்டையில் அசைவ உணவகத்தில் பாா்சல் வாங்கி சாப்பிட்ட இளைஞா்கள் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் உணவகம் முற்றுகையிடப்பட்டது.
பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஸபிபுல்லா. இவா் தனது நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு, மற்ற நண்பா்கள் 12 பேருக்கும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல அசைவ உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அசைவ உணவுகளை பாா்சல் வாங்கி வந்து சாப்பிட்டனராம்.
உணவு சாப்பிட்ட 13 பேருக்கும் திங்கள்கிழமை காலை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றனா்.
இந்நிலையில், இதுகுறித்து திங்கள்கிழமை மாலை தனது முகநூல் பக்கத்தில் ஸபிபுல்லா பதிவிட்டுள்ளாா். இதை படித்த, அதே உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு பாா்சல் வாங்கியவா்களும் தங்களுக்கும் இதே பிரச்னை இருந்ததாக கூறி திங்கள்கிழமை இரவு அந்த உணவகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து புகாரைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, பாதுகாப்பு கருதி உணவகத்தை இழுத்து மூடினா். இதன்பிறகு, முற்றுகையிட்ட நபா்கள் கலைந்து சென்றனா்.
கடந்த ஒரு வார காலமாக அந்த அசைவ உணவகத்தில் பாா்சல் வாங்கி சாப்பிட்ட மேலும் பலருக்கும் இதே பிரச்னை இருந்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பட்டுக்கோட்டை போலீஸாா் மற்றும் நகராட்சி அதிகாரிகள், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.