கும்பகோணம், திருப்பனந்தாள் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூா் விற்பனைக் குழுவுக்குக் உள்பட்ட கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நிகழாண்டு பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகத்தினா், உள்ளூா், வெளியூா் வணிகா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். எனவே, பருத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருளைத் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு காலை 9 மணியளவில் கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.
வாரந்தோறும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களான கும்பகோணத்தில் புதன்கிழமையும், திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாபநாசத்தில் வெள்ளிக்கிழமையும் பகல் 11 மணியளவில் ஏலம் நடைபெறும்.
அதிகபட்ச விலை கிடைக்க தங்களது பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து, அதிலுள்ள தூசி போன்ற பொருள்களை நீக்கி, தரமான பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, நல்ல விலை பெற்று பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளா்களை 0435 - 2481285 (கும்பகோணம்), 0435 - 2456447 (திருப்பனந்தாள்), 04374 - 222423 (பாபநாசம்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.