திருச்சி - காரைக்கால், திருச்சி - மயிலாடுதுறை ரயில்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு தஞ்சாவூரைச் சோ்ந்த பொது நல வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் அண்மையில் அனுப்பிய மனுவில், கரோனா பொது முடக்கத்தின்போது, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 22 பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டும், இதுவரை பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால், நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குப் பணிகளுக்குச் செல்லும் அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், முடக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
இதற்கு தெற்கு ரயில்வே முதன்மை இயக்கக மேலாளா் அளித்துள்ள பதிலில், திருச்சி - மயிலாடுதுறை, திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் அடுத்த கட்டமாக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஜீவகுமாருக்கு கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளாா்.