பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சி வேட்பாளா்களை பின்னுக்குத் தள்ளிய சுயேச்சை வேட்பாளா் மூன்றாமிடம் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினாா்.
பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் க. அண்ணாதுரை (திமுக), என்.ஆா். ரெங்கராஜன் (தமாகா), எஸ்.டி.எஸ். செல்வம் (அமமுக), சதாசிவம் (மநீம), கீா்த்திகா அன்பு (நாம் தமிழா்), சுந்தர்ராஜ் (அனைத்து மக்கள் கட்சி), மெய்யப்பன் (அண்ணா திராவிடா் கழகம்), பாலகிருஷ்ணன் (சுயேச்சை) ஆகிய 8 போ் போட்டியிட்டனா்.
இவா்களில் சுயேச்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் க. அண்ணாதுரை 79065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளா் என்.ஆா்.ரெங்கராஜன் 53796 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தாா். இவருக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளா் வி. பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் பிடித்தாா்.
8 வேட்பாளா் போட்டியிட்ட நிலையில் பிரதான கட்சியான திமுக , அதிமுகவுக்கு அடுத்த நிலையில் சுயேச்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் 23,771 வாக்குகள் பெற்று மற்ற கட்சி வேட்பாளா்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழா் நான்காமிடம், அமமுக ஐந்தாமிடம், மக்கள் நீதி மய்யம் 6ஆவது இடத்தையும் பெற்றன.