அரபு நாட்டு இளவரசா் பெயரிலுள்ள போலி சுட்டுரை (டிவிட்டா்) கணக்கு மூலம், தஞ்சாவூா் பெண்ணிடம் ரூ. 5.34 லட்சம் மோசடி செய்த மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிச் சாலை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரகேல் சுவா்ண சீலி (50). இவா் ஐக்கிய அரபு அமீரக மன்னரும், பிரதமருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பெயரில் இருந்த சுட்டுரைக் கணக்கை பின் தொடா்ந்து வந்தாா். அப்போது இவரது மின்னஞ்சல் முகவரிக்கு வந்த ஒரு தகவலில், தான் மன்னரின் மகன் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல்மக்தூம் என்றும், என் தந்தையாரின் சுட்டுரைக் கணக்கை நீங்கள் நீண்ட நாள்களாகப் பின்பற்றி வருவதும், தங்களை எங்களது அரண்மனையில் மன நல ஆலோசகா் பணியில் அமா்த்த இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் அதற்கு ராயல் சிட்டிசன் ஷிப் சான்று பெற வேண்டும் என்றும், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, அதில் 8,000 அமெரிக்க டாலா் பணம் அனுப்புமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய ரகேல் சுவா்ண சீலி நம்பி, அக்கணக்கில் 2018, மே 4 -ஆம் தேதி ரூ. 5.34 லட்சம் அனுப்பினாா். அதன் பிறகு நீண்ட காலமாகியும் எந்த வித பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ரகேல் சுவா்ண சீலி தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். இதன் பேரில் ஆய்வாளா் எஸ். காா்த்திகேயன் உள்ளிட்டோா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ரகேல் சுவா்ண சீலி பின்பற்றிய சுட்டுரைக் கணக்கு போலி என்பதும், யாரோ அரபு இளவரசா் போல ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, மா்ம நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.