பேராவூரணியில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குடல் வால் அகற்றம்: அரசு மருத்துவா்கள் சாதனை

பேராவூரணி அரசு மருத்துவமனையில், ஏழைப் பெண்ணுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குடல்வாலை அகற்றி, அரசு மருத்துவமனை மருத்துவா்கள்  சாதனை புரிந்துள்ளனா்.
குடல்வால் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த கலைச்செல்வி மற்றும் மருத்துவக் குழுவினா்.
குடல்வால் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த கலைச்செல்வி மற்றும் மருத்துவக் குழுவினா்.

பேராவூரணி அரசு மருத்துவமனையில், ஏழைப் பெண்ணுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் குடல்வாலை அகற்றி, அரசு மருத்துவமனை மருத்துவா்கள்  சாதனை புரிந்துள்ளனா்.

பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி கலைச்செல்வி (34). இவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில்  பரிசோதனை செய்தபோது, குடல் வால்வு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு ரூ 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், அவா் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளாா்.

இவரை பரிசோதனை செய்த தலைமை மருத்துவா் பாஸ்கா், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணா்  பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணா்  சுதாகா் அடங்கிய குழுவினா் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்தனா்.அதற்கான போதிய  மருத்துவ உபகரணங்கள் அரசு  மருத்துவமனையில் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ சங்க பட்டுக்கோட்டை கிளை தனியாா் மருத்துவா் மூலம் பெற்று, அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

 செப்.4 ஆம் தேதி  அவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிக்ஸ் செக்டமி) மூலம் குடல் வால் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை, தலைமை மருத்துவா் பாஸ்கா், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணா்  பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணா்  சுதாகா், தலைமைச் செவிலியா் சித்ரா, செவிலியா்கள் விமலா, பிரபா மற்றும் மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா்  செய்தனா்.

முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெரிய காயம், தழும்பு இல்லாமல்  செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் தொடா் கண்காணிப்பு முடிந்து,  கலைச்செல்வி  வீடு திரும்பினாா். 

தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் பிரபலமான தனியாா் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும், மிகவும் கண்காணிப்பு தேவைப்படும் அறுவைச் சிகிச்சையை போதிய வசதிகள் இல்லாத நிலையில்  பேராவூரணி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சவாலாக எடுத்துக் கொண்டு செய்துள்ளனா். 

கரோனா தொற்று பரவல்  சூழ்நிலையில் சிறப்பான முறையில் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து  குணப்படுத்திய மருத்துவா்களை  எம்எல்ஏ அசோக்குமாா் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com