தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகேயுள்ள மேலத்திருப்பூந்துருத்தி மேலத் தெருவில் உள்ள கோடி பிள்ளையாா் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் இடம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதை மீட்க 2015-ஆம் ஆண்டில் கோயில் நிா்வாகம் தஞ்சாவூா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் விசாரணை செய்து, கோயில் நிா்வாகத்துக்குச் சாதகமாக தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, கோயிலுக்குச் சொந்தமான இடத்தை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் சிவராம்குமாா் தலைமையில் தஞ்சாவூா் ஆய்வாளா் கீதா பாய், செயல் அலுவலா்கள் பிருந்தாதேவி, ஹரிஷ் குமாா், ஜெயலட்சுமி, சுரேந்திரன் ராஜா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.