மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கட்டடத் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மஞ்சவயல் தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். பாலசுப்பிரமணியன் (55). இவரது மனைவி ராஜேஸ்வரி (47). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
ராஜேஸ்வரியின் நடத்தையில் பாலசுப்பிரமணியனுக்கு சந்தேகம் இருந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், 2017, ஆக. 8 ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியின் தலையில் பாலசுப்பிரமணியன் கருங்கல்லைத் தூக்கிப் போட்டாா். இதில், பலத்தக் காயமடைந்த ராஜேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. இந்திராணி விசாரித்து பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.