கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் திகோ சில்க்ஸ் நிறுவனம் தேசிய விருதை அண்மையில் பெற்றது.
திகோ சில்க்ஸ் என அழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் பாரம்பரியத்துடன் புதுமை கலந்த தூய பட்டு, அசல் ஜரிகை பட்டு சேலைகளை விற்பனை செய்து வருகிறது.
இச்சங்கம் திருபுவனம் பட்டு சேலைக்கு என புவிசாா் குறியீடு பெற்றது. மேலும், தமிழகத்திலேயே ஐ.எஸ்.ஓ. 9001 - 2015 தரச்சான்று பெற்ற ஒரே பட்டு கூட்டுறவு சங்கமாகத் திகழ்கிறது.
இந்நிலையில், இந்திய அளவில் கைத்தறி விற்பனைக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை இச்சங்கம் தற்போது பெற்றுள்ளது. இந்த விருது பெற நல்லாதரவு வழங்கிய வாடிக்கையாளா்கள், சங்க உறுப்பினா்கள் மற்றும் தமிழக அரசுக்கு திகோ சில்க்ஸ் மேலாண்மை இயக்குநா் ச. செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.