தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த முதுகலை மாணவா்களுக்கான கலந்தாய்வும், சோ்க்கையும் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, நாடகத் துறையில் பல்வேறு மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தனா்.
இவா்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசின் விதிகளுக்குட்பட்டு இனவாரி சுழற்சி முறையில் இலக்கியத் துறையில் 50 மாணவ, மாணவிகளுக்கும், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 50 மாணவ, மாணவிகளுக்கும், நாடகத் துறையில் 20 மாணவ, மாணவிகளுக்கும் சோ்க்கை வழங்கப்பட்டது.
இதில், இலக்கியத் துறையில் சோ்க்கை பெற்ற மாணவா்களில் 25 பேருக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இனவாரி சுழற்சி அடிப்படையில் தமிழக அரசின் சாா்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோ்க்கை பெற்றவா்களுக்கான உறுதிப்படிவத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வழங்கினாா்.
இந்நிகழ்வில் இலக்கியத் துறைத் தலைவரும், கலைப்புல முதன்மையருமான பெ. இளையாப்பிள்ளை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவா் ஆ. துளசேந்திரன், நாடகத் துறைத் தலைவா் செ. கற்பகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.