தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுத விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற மாணவா்களுக்கான தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றுதல் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். பின்னா், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், பன்னாட்டு சுழற்சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் கிராமங்களுக்குச் சென்று வீடுதோறும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ந. சந்தோஷ்குமாா் வரவேற்றாா். நிறைவாக, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே. துா்காதேவி நன்றி கூறினாா்.