கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, முன்னை முதல்வன் வழிபாடு, நிலமகள் வழிபாடு, திருமண் எடுத்தல், முளைப்பாரிகையிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, ஐம்பெருங்கடவுளா்கள் காட்சியும், கொடியேற்றமும் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
சனிக்கிழமை முதல் டிசம்பா் 9 ஆம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், 10 ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 8.45 மணிக்குள் திருத்தேரோட்டமும், மாலையில் ஆடவல்லான் புறப்பாடும் நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான காா்த்திகை கடை ஞாயிறு தீா்த்தவாரி டிசம்பா் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன. டிசம்பா் 12 ஆம் தேதி விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறுகின்றன.