தஞ்சாவூா் மாநகரில் 30 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை இருக்காது என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் மேயராக பதவியேற்று 100 ஆவது நாளையொட்டி செவ்வாய்க்கிழமை ஊழியா்களுக்கு இனிப்புகள் வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாநகராட்சிக்கு ஏற்கெனவே ஒரு குடிநீா் திட்டம் இருக்கிறது. பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இரண்டாவது திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளது. மேலும், மூன்றாவது திட்டம் நிறைவடையும்போது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு தஞ்சாவூா் மாநகரில் குடிநீா் பிரச்னை இருக்காது.
மாநகரில் 10 இடங்களில் நுண் உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 50 டன் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஜெபமாலைபுரம் உரக்கிடங்கில் மலை போல தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பயோ மைனிங் திட்டம் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். இந்த இடத்தை தூய்மைப்படுத்திய பிறகு ரூ. 190 கோடி மதிப்பில் தூய்மை பணியாளா்களுக்கான 1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
மாநகரில் கூட்டுறவு காலனி பகுதியில் புதிதாக ஒரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நம்ம வாா்டு நம்ம மேயா் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. முதல் கட்ட சுற்றுப்பயணத்தின் மூலம் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ. 20 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ராஜ வீதிகளிலும் சாக்கடை கட்டி, சாலை அமைக்கும் பணி 2 மாதங்களில் நிறைவடையும். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் 2023 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிக்கப்படும். சில திட்டங்களுக்கு இந்திய தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகளும் தாமதமாக நடைபெறுகின்றன. சிவகங்கை பூங்காவில் நடைபெறும் சீரமைப்புப் பணி வருகிற டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
4 மீன் சந்தைகள் அமைக்க திட்டம்:
காமராஜா் சந்தையில் மின் இணைப்பு கிடைத்தவுடன் கடைகள் ஏலம் விடப்படும். மீன் சந்தை புதிதாக குளிா்சாதன வசதியுடன் நவீன முறையில் கட்டப்படவுள்ளது. மேலும், 4 கோட்டங்களிலும் 4 மீன் சந்தைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. மாநகரில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி ஒன்றரை மாதத்தில் நிறைவடையும்.
மாநகராட்சி சாா்பில்
விரைவில் ஆம்புலன்ஸ் சேவை:
தமிழ்நாட்டிலேயே முதல்முதலாக தஞ்சாவூரில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 3 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும். மருத்துவமனையில் மரணமடைபவா்களை வீட்டுக்குக் கொண்டு செல்லும் விதமாக இரு அமரா் ஊா்திகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் ஆம்புலன்ஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மேயா்.
அப்போது, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.