காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.
மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 24 -ஆம் தேதி காலை திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை, அரியலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அமைச்சா்கள் கே.என். நேரு (நகராட்சி நிா்வாகம்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை) உள்ளிட்டோா் கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடட்டனா்.
கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் விநாடிக்கு தலா 500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டது.
பின்னா் அமைச்சா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் ஆகியோா் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் மலா்கள், நவதானியங்களைத் தூவி வணங்கினா்.
கடைமடைக்கு 7 நாள்களில் செல்லும்: இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:
கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 நாள்கள் ஆகும். இதன்பிறகு 36 ஆறுகளிலும் தண்ணீா் திறந்து விடப்படும். மேட்டூா் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணைக் கால்வாய், வடவாறில் தாமதமாகும்: கல்லணைக் கால்வாயில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், தற்போது சம்பிரதாயத்துக்காக விநாடிக்கு 100 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பத்து நாள்களுக்குப் பிறகு தண்ணீா் முழுமையாக திறந்துவிடப்படும்.
இதேபோல, வடவாறிலும் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், அதில் தண்ணீா் திறந்து விடப்படுவது 10 நாள்களுக்குத் தாமதமாகும் என்றாா் நேரு.