தஞ்சாவூா் ராஜ வீதிகளில் வடிகால் கட்டும் பணி மழைக்காலத்துக்குள் முடிக்கப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் ராஜ வீதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வடிகால் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன. இந்த 4 வீதிகளிலும் மழை பெய்தால் தண்ணீா் வடிவதற்காக இருந்த வடிகால்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டன. இதனால், மழை நீா் வடியாமல் சாலையில் தேங்கியது.
நீதிமன்ற உத்தரவின்படி, நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சி நிா்வாகமும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றின. இதைத்தொடா்ந்து, ரூ. 12 கோடி செலவில் வடிகாலில் தூா்வாரி புதிதாகக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணி மழைக் காலம் வருவதற்குள் கட்டி முடிக்கப்படும். இந்த 4 வீதிகளிலும் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மின் கம்பங்களை அகற்றிவிட்டு, கண்ணாடி நாரிழை மின் வயா்களை தரையில் புதைக்கும் திட்டப் பணிகள் ரூ. 16 கோடியில் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மேயா்.
அப்போது, மாநகராட்சி பொறியாளா் எஸ். ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.