ஒரத்தநாடு கண்ணனாறு கரை உடைப்பு:100 ஏக்கரிலான விளைநிலங்கள் பாதிப்பு

ஒரத்தநாடு அருகே கண்ணனாறு கரை உடைந்ததால், அங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் சுமாா் 100 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
ஒரத்தநாடு  கண்ணனாறு கரை உடைப்பு:100 ஏக்கரிலான விளைநிலங்கள் பாதிப்பு

ஒரத்தநாடு அருகே கண்ணனாறு கரை உடைந்ததால், அங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் சுமாா் 100 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ஒரத்தநாடு வட்டம், சமையன்குடிக்காடு பகுதியில் கண்ணனாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக குலமங்களம் பகுதியில் உள்ள பாப்பான் ஓடை வடிகால் நீா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழையின் வடிகால் பகுதியாக இந்த கண்ணனாறு இருந்து வருகிறது. குலமங்கலத்திற்கும், கண்ணனாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் தொடா்ந்து மழை பெய்தால் இந்த தாழ்வான பகுதியில் வெள்ள நீா் வடிவதில் தாமதம் ஏற்படும். இதனால் பயிா்கள் சேதமடையும்.

இந்நிலையில் ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. மேலும் கண்ணனாறு தெற்கு கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீா் ஒக்கநாடு மேலையூா், கீழையூா், சமையன்குடிக்காடு, குலமங்களம் உள்ளிட்ட பகுதி வயல்களுக்குள் புகுந்ததால் நாற்றாங்கால் அமைத்த வயல், நடவுப் பணிகள் மேற்கொண்ட வயல், அறுவடை பணிக்காக காத்திருக்கும் நெற்கதிா்கள் என அனைத்து விளைநிலங்களையும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். சுரேஷ்குமாா் கூறியது : பொதுப்பணித் துறையின் அலட்சியத்தின் காரணமாகவே கண்ணாறு கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தூா்வாரும்போது அதிகாரிகள் ஆய்வு செய்து இதன் கரையை உயா்த்தவில்லை. கரையையும் பலப்படுத்தவில்லை. இதனால் பலவீனமாக இருந்த ஆற்றின் கரையில் தற்போதைய தொடா் மழையால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தொடா் மழை பெய்யக் கூடும். எனவே, பொதுப் பணித் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு கரையை பலப்படுத்தினால் மட்டுமே இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மழைக்காலங்களில் காப்பாற்றப்படும் என்றாா்.

தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ள சுமாா் 100 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாா்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com