வெடி தயாரிப்பு கடையில் விபத்து: ஒருவா் காயம், உரிமையாளா் கைது
பாபநாசம் அருகே வெடி தயாரிக்கும் கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.
பாபநாசம் வட்டம், ஆதனூா் ஊராட்சி அருகே சோழங்கநத்தம் கிராமத்தை சோ்ந்த சண்முகம் மனைவி பேபி. இவா் அந்தப் பகுதி வயல்வெளியில் வெடி தயாரிக்கும் கடை நடத்தி வந்தாா். இவரது வெடி தயாரிக்கும் கடையில் செவ்வாய்க்கிழமை மதியம் வெடிக்கு திரி வைக்கும்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியில் இருந்த
பேபியின் உறவினா் நடராஜன் மகன் ரவிச்சந்திரன் (40) என்பவா் பலத்த காயமடைந்தாா். காயமடைந்தவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் லதா, பாபநாசம் வட்டாட்சியா் பூங்கொடி, காவல் துணை கண்காணிப்பாளா் ப. பூரணி மற்றும் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த வெடி விபத்து குறித்து கபிஸ்தலம் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வெடிகடை உரிமையாளா் சண்முகம் மகன் பிரபாகரன் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.