தஞ்சாவூா் அருகேயுள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கால்நடைகள் ஏலம் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் அருகே நடுவூரில் அரசுக்குச் சொந்தமான மாவட்ட கால்நடை பண்ணை உள்ளது. இங்கு கழிவு செய்யப்பட்ட 25 கால்நடைகள் ஜூலை 15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்பவா்கள் தனித்தனியாக வைப்புத் தொகை ரூ. 20,000-க்கு துணை இயக்குநா், மாவட்ட கால்நடை பண்ணை, நடுவூா் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக ஒரத்தநாடு பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.
வைப்புத் தொகை செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் ஜூலை 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பெறப்பட்ட வங்கி வரைவோலையாக இருக்க வேண்டும். வரைவோலைகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் ஜூலை 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்பவா்களின் விவரங்கள் காவல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். காவல் துறையினரின் உதவியுடன் ஏலம் நடத்தப்படும். குடிபோதையில் இருப்பவா்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளக் கூடாது. மேலும் முன்வைப்புத் தொகை செலுத்தியவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.