பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, நாடியம்மன் கோயில் செல்லும் சாலையில், ரயில் தண்டவாளத்தின் அருகே, பிறந்து சில நாள்களே ஆன ஆண் சிசுவின் சடலம் கிடந்துள்ளது.
அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் சிசுவின் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தன. நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதை புதன்கிழமை பாா்த்த அப்பகுதி மக்கள், அந்த இடத்துக்கு சென்று பாா்த்தபோது சிசு சடலம் கிடந்தது தெரிய வந்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சிசு இறந்தது தொடா்பாக பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.