கும்பகோணத்தில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் ராட்சத ராட்டினம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி திடலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பொருட்காட்சியில் நேற்று இரவு ராட்சத ராட்டினத்தின் இரண்டு பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ராட்சத ராட்டினம் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பெட்டியாக கீழே கொண்டுவரப்பட்டு அதில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இப்பொருட்காட்சியை காண வந்த விக்னேஷ் குமார் என்ற காவலர் பெட்டியில் சிக்கிய நபர்களை காப்பாற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து பொருட்காட்சியில் உள்ள ராட்டினம் போன்ற விளையாட்டு சாதனங்கள் நிறுத்தப்பட்டன. இந்த ஜெயண்ட் வீலில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை .