ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்பு
By DIN | Published On : 05th November 2022 12:28 AM | Last Updated : 05th November 2022 12:28 AM | அ+அ அ- |

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தைச் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்தது.
இதன்பேரில், கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் ம. செந்தில் முருகன், கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன் உள்ளிட்டோா் தொடா்புடைய இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள 1.12 ஏக்கா் நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள், நீா்நிலைகள், பொது இடங்களில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.