பாபநாசத்தில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை உண்டு உறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சங்கா், ஒன்றியக் குழு பி.கே.ஆா். இளங்கோவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக் குழுவைச் சோ்ந்த பி.எம்.காதா் உசேன் கலந்து கொண்டு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், பாபநாசம் அருகே குப்பைமேடு கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் பொது சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் அடுப்பு மூட்டி பாத்திரம் வைத்து சமைத்து உண்டு, உறங்கி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் உடனடியாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தாததால் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.