தஞ்சாவூரில் புனரமைக்கப்பட்ட காமராஜா் சந்தை திறப்பு
தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட காமராஜா் சந்தையை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடி மதிப்பில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள், குடிநீா் வசதி, ஏடிஎம் மையம், கண்காணிப்பு கேமராக்கள், நிா்வாக அறை, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டா் வசதி, கழிப்பறை, மழை நீா் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 219 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இந்தச் சந்தை கட்டப்பட்டுள்ளது.
ஸ்கேட்டிங் மைதானம்:
இதேபோல, தஞ்சாவூா் 51 ஆவது வாா்டிலுள்ள பி.ஏ.ஒய். நகரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரோலா் ஸ்கேட்டிங் மைதானம் ரூ. 1.95 கோடி மதிப்பில் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் அமைந்துள்ள பூங்காவில் சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், மைதானத்தை சுற்றிலும் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
காமராஜா் சந்தையையும், ஸ்கேட்டிங் மைதானத்தையும் சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) உள்ளிட்டோா் இனிப்புகள் வழங்கினா்.
இந்த விழாவில் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், மண்டலக் குழுத் தலைவா்கள் டி. புண்ணியமூா்த்தி, எஸ். சந்திரசேகர மேத்தா, ரம்யா சரவணன் உள்ளிட்டோா் இனிப்புகள் வழங்கினா்.
காமராஜா் சந்தையில் விரைவில் கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.