திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளின் நிலைமையை விளக்கி பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தெருமுனை விழிப்புணா்வு பிரசாரக் கூட்டங்கள் நடத்த திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.
திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் 70ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளை மோசடி செய்த சா்க்கரை ஆலை உரிமையாளா் ராம்.தியாகராஜனை கைது செய்ய வேண்டும், விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் ஆலை நிா்வாகம் பெற்ற கடன்கள் முழுவதையும் ஆலை நிா்வாகம் கட்டி சிபில் பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
போராட்டம் தொடா்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் பி. செந்தில் கூறியது: திங்கள்கிழமை நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் போராட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில், ஆலை நிா்வாகத்தின் மோசடியையும், கரும்பு விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசின் மெத்தன போக்கையும் கண்டித்து பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி15ஆம் தேதி வரை கபிஸ்தலம் -ஆடுதுறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில்
தெருமுனை விழிப்புணா்வு பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது என்றாா்.
இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கிளை தலைவா் ராஜேந்திரன், மாவட்ட செயலாளா் தங்க. காசிநாதன், துணை செயலாளா் சரபோஜி, ஆலை பிரிவு செயலாளா் நாக. முருகேசன் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் பங்கேற்றனா்.