12,300 பகுதி நேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
தமிழக அரசு 12,300 பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா்.
இதுகுறித்து கும்பகோணத்தில் சனிக்கிழமை அவா் தெரிவித்தது:
தமிழக அரசுப் பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 16,549 பகுதி நேர ஆசிரியா்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் ஆகியவற்றில் ரூ. 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு, தற்போது 12,300 பகுதிநேர ஆசிரியா்கள் ரூ. 10,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனா்.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக தனது தோ்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு முடியும் தருவாயில்கூட இன்னும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்படவில்லை.
மேலும், பகுதிநேர ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸ், ஊதிய உயா்வு, மே மாத ஊதியம் உள்ளிட்டவை வழங்காமல் இருப்பது பகுதிநேர ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசாணை உள்ளது. ஆனால் பகுதி நேர ஆசிரியா்கள் 11 ஆம் ஆண்டாக பணிபுரிந்து வருகின்றனா். எனவே, தமிழக முதல்வா் திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் 181 ஆவது வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய ஆணையிட வேண்டும் என்றாா் செந்தில்குமாா்.