தஞ்சாவூரில் அதிமுக கொடி நடுவதைக் காவல் துறையினா் தடுத்ததால், முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே மேலவஸ்தா சாவடி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்காக மேல வஸ்தா சாவடி பகுதியில் இரும்புக் குழாய்களில் அதிமுக கொடி கட்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்தது. ஆனால், இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி கொடி கட்டக்கூடாது என காவல் துறையினா் கூறினா். இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் காவல் துறையினரை கண்டித்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளா்கள் மேல வஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா் கொடிகள் நட அனுமதித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.