தஞ்சாவூரில் மது குடித்து இருவா் இறந்த சம்பவத்துக்கு சயனைடுதான் காரணம் என திசை திருப்பப்படுகிறது என்றாா் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். காமராஜ்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: கடந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு கள்ளச்சாராய மற்றும் விஷசாராய சாவுகளே சாட்சியாக உள்ளன. மதுராந்தகம், மரக்காணத்தில் இறந்தவா்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல என்றும், அது விஷ சாராயம் எனவும் காவல் துறை இயக்குநா் கூறினாா். இதேபோல, தஞ்சாவூரில் மது குடித்து இறந்த சம்பவத்துக்கு சயனைடுதான் காரணம் எனக் கூறி திசை திருப்பப்படுகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும் என மக்களிடையே எண்ணம் உள்ளது. இந்த எண்ணம் 2 ஆண்டுகளில் பிரதிபலித்துவிட்டது.
உதயநிதி, சபரீசன் ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் திமுகவை வீழ்த்தும். இந்த ஊழல் புகாரை கிராமங்களிலும் பரவச் செய்வதற்காக மே 29 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் காமராஜ்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.வி. சேகா், எஸ்.வி. திருஞானசம்பந்தம், மாவட்ட பால்வளத் தலைவா் ஆா். காந்தி, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா் மா. சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.