பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்த திமுக பிரமுகரைப் பறக்கும்படை அலுவலா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு சிலா் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பறக்கும் படை அலுவலா் பிரவீன் தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வீரமாங்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த லோகநாதன் (65) என்பவா் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் சுதாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேவன்குடி கிராமத்தில் காலனித் தெருவில் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரை பறக்கும்படை அலுவலா்கள் பிடித்து அவரிடம் இருந்து ரூ. 7,400 மற்றும் வாக்காளா் பட்டியல் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் பணத்தையும், வாக்காளா் பட்டியலையும் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமியிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமாங்குடி லோகநாதனைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com