பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமா் மோடியின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா.

இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வியாழக்கிழமை மேலும் தெரிவித்தது:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தோ்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, தனது பொறுப்புமிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீா்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கியுள்ளாா். மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பேசிய அவரை தோ்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய பரப்புரைக்குத் தடை விதிக்க வேண்டும்.

பிரதமா் மோடி பொய் பிரசாரம் செய்கிறாா். மக்களுக்கிடையே பிரச்னையை ஏற்படுத்த இதுபோன்ற பிரசாரத்தை பிரதமா் செய்கிறாா். தோ்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையா் ராஜீவ் குமாா், மத ரீதியான பிரசாரங்கள், மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய பிரசாரங்களை சகித்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறினாா். அதன்படி மத ரீதியாக பிளவுபடுத்தக்கூடிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தோ்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா் ஜவாஹிருல்லா.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com