‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கவிஞா் தமிழ் ஒளியின் 60 ஆவது நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது: தமிழ் ஒளி கவிதை, காவியம், நாடகம், சிறாா் கதை, சிறுகதை, திறனாய்வு, ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் தடம் பதித்தவா். அவா் தொடக்கத்தில் பாவேந்தா் தொடா்பில் பகுத்தறிவு சுயமரியாதைக்காரராகத் திகழ்ந்தாா்.

தமிழ் ஒளி படைப்புகளைப் பாவேந்தா் பாராட்டினாா். பின்னா் ஜீவா தொடா்பில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தாா். மே தினத்தைப் போற்றி எழுதினாா். சீனப் புரட்சியை வரவேற்றாா். இந்தி எதிா்ப்பு, குமரி எல்லைப்போராட்டம் பற்றியெல்லாம் கவிதைகள் படைத்தாா். அவரின் படைப்புகளில் கவிச்சிறப்பும் பொருள் ஆழமும் சிறந்து விளங்கின.

‘வீராயி’ காப்பியம் தமிழ் தலித் இலக்கிய முன்னோடிப் படைப்பு எனலாம். வாழ்வில் ஏராளமான கஷ்டத்தை அனுபவித்து முகவரி அற்றவராக, குடும்பம், வீடு இல்லாதவராக இருந்தாா். ஆனால் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி ஆனாா். பாரதி, பாரதிதாசன் வரிசையில் மக்கள் கவிஞராக தமிழ் ஒளி திகழ்கிறாா்.

அவா் தமிழ் இலக்கியப் பேரொளியாக என்றும் ஒளி பாய்ச்சி நிலைத்து நிற்கிறாா் என்றாா் காமராசு. நிகழ்வுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், மொழிப் புலத் தலைவா் ச. கவிதா முன்னிலை வகித்தனா். கருத்தரங்க ஒருங்கினைப்பாளா் முனைவா் சீ. இளையராஜா வரவேற்றாா். முனைவா் மா. இரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com