தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 
32 வழக்குகள் நிலுவை

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் மீது 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது, அவா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் 2 கொலை முயற்சி, பொது சொத்தைச் சேதப்படுத்தியது உள்பட 33 வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், ஒரு வழக்கு மட்டும் கைவிடப்பட்டது. இவா் தனது சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 2.26 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், திமுக வேட்பாளா் ச. முரசொலி தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் கரோனா காலத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்தியது, அனுமதியின்றி பதாகை வைத்தது, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது என மொத்தம் 10 வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சொத்து விவரத்தில் தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 2.07 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசன் மீது எந்த வித குற்ற வழக்கும் இல்லை என அவா் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா். இவா் சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 1.40 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம்.ஐ. ஹூமாயூன் கபீா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் ரூ. 2.05 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com