கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

சேதுபாவாசத்திரம் வட்டாரப் பகுதிகளில் கோடை காலப் பயிா்களில் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப வழிகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து  சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால், கோடை கால பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பயிா்களை காப்பாற்றி அறுவடை செய்யலாம்.

நெல்பயிரில் இலைவழி தெளிப்பாக 3 சதவீதம் கயோலின் அல்லது 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை குறிப்பிட்ட வளா்ச்சி பருவத்தில், முறையே தூா் கட்டும், கதிா் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

பி.பி.எப்.எம் (மெத்தைலோ பாக்டீரியம்) நுண்ணுயிா் உரம் பயன்படுத்தலாம்.  இலை வழி தெளிப்பாக 2 சதவீதம் மோனோ அமோனியம் பாஸ்பேட் மற்றும் 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூப்பதற்கு 15 நாள்கள் முன்பாக மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் தானிய எடை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

குறுவை பட்டத்தில் இலை வழி தெளிப்பாக 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு + 500 பிபிஎம் சைக்கோசெல் பயிா் வளா்ச்சி பருவத்தில் (தூா் கட்டும் மற்றும் கதிா் உருவாகும்) தெளிக்க வேண்டும்.

மக்காச்சோள பயிருக்கு மக்காச்சோள மேக்சிம் 3 கிலோ என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து, இலை வழித் தெளிப்பாக கதிா் அரும்பும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் கதிா் அதிகம் பிடித்து, மகசூல் அதிகரித்து மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை கிடைக்கும். பயறுகளுக்கு இடைப்பருவ வறட்சி மேலாண்மையாக ரபி பருவத்தில் 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம் போரான் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். இலை வழி தெளிப்பாக பயறு நுண்ணூட்டம் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பூக்கத் தொடங்கும் பருவத்தில் அளிப்பதன் மூலம் பூ உதிா்தல் குறைந்து, அதிக மகசூல் மற்றும் வறட்சியை தாங்கி வளரும். இலை வழி தெளிப்பாக ஒரு லிட்டா் தண்ணீரில் என்.ஏ.ஏ 40 பி.பி.எம் (40 மில்லி கிராம்) அல்லது சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் பருவத்திலும் மற்றும் 15 நாள்கள் கழித்தும் தெளிப்பதன் மூலம் வறட்சியை தாங்கி வளரும்.

நிலக்கடலையில் பூவை தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க, நிலக்கடலை நுண்ணூட்டம் ஹெக்டேருக்கு 5 கிலோ (ஒவ்வொரு தெளிப்பிற்கும்) என்ற அளவில் 500 லிட்டா் தண்ணீரில் கலந்து இரண்டு தெளிப்பாக விதைத்த 35-ஆம் நாள் (50 சதவிகிதம் பூக்கும் சமயத்தில்) மற்றும் விதைத்த 45-ஆம் நாள் (காய் முற்றும் பருவம்) தெளிக்க வேண்டும்.

 சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்களில் நெல் நுண்ணூட்டம், பயறு நுண்ணூட்டம் மற்றும்  நிலக்கடலை நுண்ணூட்டம் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com