திருச்சி மாவட்டம், கே. கள்ளிக்குடியில் ரூ.65 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வணிக வளாகக் கட்டுமானப் பணிகளை விரைந்துமுடிக்க அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 தரம் பிரிப்புக் கூடங்கள், 10 பிளாக்குகளில் அமைக்கப்பட்டுள்ள 1000 கடைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
குளிர்பதனக் கிடங்கில் விளைபொருள்கள் இருப்பு வைத்து பயன்படுத்தப்படும் விவரம், தரம் பிரிப்பு மையப் பயன்பாடு, விளைபொருள் வாரியாக கடைகள் ஒதுக்கீடு, வணிக வளாகத்துக்கு வந்து வாகனங்கள் இடையூறு இன்றி பொருள்களை கடைக்குச் சேர்க்கும் முறைகள், கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு, இருசக்கர, இலகு மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடங்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, வேளாண் விற்பனை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கைலாசபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி, வருவாய்க் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முக ராஜேசுவரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.