காசோலை மோசடி வழக்கில் பிணையம் அளிக்க முன்வராத நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடிஆணை பிறப்பித்தது.
சென்னையைச் சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 2011-ல் துறையூர் பெரிய கடைவீதி வெல்லமண்டி உரிமையாளரான நா. வரதராஜனிடம் ரூ. 60 லட்சம் கடனாகப் பெற்றாராம். அந்தக் கடனை அவர் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் ரூ. 30 லட்சத்துக்கு காசோலை வழங்கினாராம். இதையடுத்து வரதராஜன் வங்கியில் செலுத்திய அந்தக் காசோலை கணக்கில் பணமின்றி திரும்பியது.
இதையடுத்து கடந்த 2015-ல் காசோலை மோசடி செய்ததாக நடிகருக்கு எதிராக வரதராஜன் துறையூர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த வழக்கானது விதிகளின்படி சென்னை பெருநகர் நீதிமன்றம் (நிலை 2)- க்கு மாற்றப்பட்டது. பின்னர் விதிகளில் செய்த மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நீதிமன்றத்தில் நேரில் வந்து பிணையம் அளிக்க வேண்டிய பவர்ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகத் தவறி வந்த நிலையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். வடிவேல் வியாழக்கிழமை அவருக்கு எதிராகப் பிடிஆணை பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.