முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரு. பாஸ்கரன், தமிழக முதல்வரிடம் அளித்த மனுவின் விவரம்: 1996-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முத்துராஜா, முத்திரியர், அம்பலக்காரர், வலையர், முத்தரையர், பாளையக்கார நாயுடு, முதிராஜ், சேர்வைக்காரன் உள்ளிட்ட 29 பட்டப்பெயர்களில் வாழ்ந்த அனைவரையும் முத்தரையர் என அழைக்க அரசாணை பிறப்பித்தார். அதில், சரிபாதி எம்பிசி, டிஎன்சி பட்டியலிலும், மறுபாதி பிசி பட்டியலிலும் இருந்து வருகின்றனர்.
முத்தரையர் தலைப்பிட்ட பட்டியலில் உள்ள அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது எம்பிசி சலுகை அளிக்க சட்டதிருத்தம் செய்திட வேண்டும் அல்லது முத்தரையர் பட்டியலில் உள்ள பிசி பிரிவினருக்கு 5 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவில் தனி உள் இடஒதுக்கீட்டை வழங்கிடவும், எம்பிசி பிரிவினருக்கு 5 சதவீதம் தனி உள்இடஒதுக்கீடு வழங்கிடவும் வேண்டும்.
தமிழக அரசின் ஆணையங்கள், கழகங்கள், வாரியங்கள், அரசாங்க குழுக்கள், அரசு வழக்குரைஞர்கள், பல்கலைக்கழக பதவிகளில் செனட், சிண்டிகேட், பதிவாளர் பதவிகளை முத்தரையர் மக்களுக்கு உரிய பங்கினை அளித்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.