காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மே 14-ஆம் தேதி, கர்நாடகம் வரையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது. அதன்படி திங்கள்கிழமை காலை அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே குவிந்தனர். தலைவர் ஷரீப் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்து நடைபயணத்துக்கு தடைவிதித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையையும் மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 97 மகளிர் உள்ளிட்ட 152 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.