தீக்குளித்த தச்சுத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு நடுத்தெருவைச் சேர்ந்த செல்வம் என்ற ஆறுமுகம் மகன் உதயகுமார்(27). இவருக்கு சத்யா(22) மனைவி, மகன் மனோஜ்(4), மகள் ஹரிணி(2) உள்ளனர்.
தச்சுத் தொழிலாளியான உதயகுமார் சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்வதில்லையாம். இதையடுத்து ஞாயிற்றுகிழமை பிற்பகல் வீட்டில் இருந்த உதயகுமாரை அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட அவரை, உறவினர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப் பிறகு மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயகுமார் இறந்தார்.
வேன் மோதி மூதாட்டி சாவு: திருச்சி தென்னூர் அண்ணாநகரைச் சேர்ந்த கந்தன் மனைவி ராசாத்தி(60). இவர் சனிக்கிழமை அப்பகுதியில் சென்றபோது அவ்வழியாகச் சென்ற வேன் மோதியதில் காயமடைந்த அவர் நிகழ்விடத்தில் இறந்தார்.
விஷமருந்திய தொழிலதிபர் சாவு: திருச்சி பீமநகர் ராஜா காலனியைச் சேர்ந்தவர் ஜ.ரபீக் (35), பொன்மலை ஜி கார்னரில் இரும்பு நிறுவனம் நடத்தி வந்தார். சில நாள்களாக விரக்தியில் காணப்பட்ட அவர் சில நாள்களுக்கு முன்பு நிறுவனத்தில் வைத்து விஷம் குடித்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ரபீக் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில்மோதி இளைஞர் சாவு: திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர் அஷ்ரப்அலி(28). இவர் சனிக்கிழமை அண்டகொண்டான் ஓ பாலம் அருகே தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெவ்வேறு சம்பவங்களில் வீடு தீக்கிரை; இளைஞர் காயம்: கோட்டை பாபு ரோடு மேல காசிபுரத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு ஒரே வளாகத்தில் உள்ள 4 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒரு வீட்டில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல்கரீம் (39) குடும்பம் வசித்து வருகிறது. தீபாவளியையொட்டி, குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கிய அப்துல் கரீம் வீட்டில் வைத்திருந்தார்.
அவரது குழந்தைகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து விளையாடினர். இதில் ஏற்பட்ட தீயையடுத்து, வீட்டில் இருந்து புகை வந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து குழந்தைகளை மீட்டனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். உறையூர் செட்டித்தெருவைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் (20) ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்த போது, எதிர்பாராத வகையில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






